Friday 19 June 2015

வீரமாங்குடி - என் தேசம் என் மக்கள்

முன்னுரை

  • இந்த INTERNET யுகத்தில் நம் வாழ்க்கை அன்றாட தேவைகள் எல்லாமே வலைத்தளம் சார்ந்த ஒன்றாய் மாறிவிட்டது. 
  • தகவல் பரிமாற்றம், வர்த்தகம், வணிகம், கல்வி,  என அனைத்தும் இணைத்தளம் சார்ந்த ஒன்றாகிவிட்டது.
  • அறியாத தெரியாத தவல்களை பெற இணையத்தை நாடும் சூழல் நிலவுகிறது.
  • இத்தகைய காலகட்டத்தில் நம்மை சார்ந்த அல்லது நம் மண் சார்ந்த தகவலை நாம் இணையத்தில் தேடும் போது, அதை பற்றிய செய்திகள் கிடைக்காத போது ஏற்படும் ஏமாற்றம் ஒரு மிகபெரிய சோகம்தான்.
  • வலைத்தளத்தில் வீரமாங்குடியை பற்றி  தேடிய போது அவ்வளவாக செய்திகள் இல்லாதது கண்டு வருந்திய அடுத்த கணமே உதித்த எண்ணம் தான் இந்த வீரமாங்குடி Blog ஐ உருவாக்க முக்கிய கூறு.
  • ஏதோ ஒரு தொகுப்பாக இல்லாமல் முழுமையான களஞ்சியமாய் இருக்கவேண்டும் என்பதில் தனி கவனம் கொண்டு ஊரை சுற்றி எடுத்த படங்களும், தொகுத்த செய்திகளும் தான் வீரமாங்குடி - என் தேசம் என் மக்கள் வரலாற்று தொகுப்பாய் http://veeramangudi.blogspot.in/  உங்கள் பார்வைக்கு.
  • இது ஒரு பிறந்த மண்ணுக்கு செய்யும் மரியாதை

அமைவிடம்


  • தஞ்சையிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், ஐயாறப்பர் ஆலயம் அமைந்து உள்ள திருவையாற்றில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் வீரமாங்குடி கிராமம் அமைந்துள்ளது. வான் பொய்ப்பினும் தான் பொய்யாமல் ஒரு காலத்தில் பாய்ந்த காவிரியின் வடக்கிலும், கொள்ளிடம் ஆற்றின் தெற்கிலும் இடைப்பட்டு நிற்கிறது, இந்த எழிலார்ந்த கிராமம்.
  • 2010ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சுமார்  3025 பேர் அதில் ஆண்கள் : 1547  பெண்கள்: 1478
  • இதன் துணை கிராமமாக தேவன்குடி கிராமம் உள்ளது. அதாவது வீரமாங்குடி பஞ்சாயத்தில் வீரமங்குடி, புதுத்தெரு மற்றும் தேவன்குடி ஆகியன ஒரே குடையின் கீழ் உள்ளன.

பழங்கதையாய்



·             வீரமாங்குடி கிராமத்திலே இந்து சமயத்தின் உட்பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் உள்ளிட்ட அறுவகைத் தெய்வங்களுக்கும் தனித்தனியே ஆலயங்கள் உண்டு. அதற்குரிய விழாக்களும் ஒரு காலத்தில் தவறாமல் நடந்து வந்தது. செல்லியம்மன் ஆலயத் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்று வந்தன. தேரோடும் வீதியெங்கும் மக்கள் திரண்டு சாமி கும்பிட்டு வந்தார்கள். "ஊருணி பொங்கல்' என்றும் "ஒப்பில்லாப் படையல்' என்றும் செல்லியம்மனுக்குப் படைத்தனர். இன்று தேரும் இல்லை, திருவிழாவும் இல்லை என்றாகிவிட்டது. காவல் தெய்வம் கருப்பண்ண சாமிக்கும் பொங்கலிட்டு ஆடி மாதத்திலே அற்புத திருவிழா நடத்தினர். அதுவும் இப்போது நின்று போய் இப்போதோ எப்போதோ என்று ஆகிவிட்டது.

·             இவ்வூரிலுள்ள திரௌபதி அம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா, சுற்றுவட்டார கிராமங்களில் வெகு பிரசித்தம். திருவிழா ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே கோயில் பூசாரியார் தன் குழுவினருடன் மகாபாரதக் கதையை பாட ஆரம்பித்துவிடுவாராம். பம்பை, உடுக்கை முழங்க அவர் கதை சொல்லும் பாணி அலாதியாக இருக்குமாம். ""கதை துவங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே பம்பை ஒலிக்கத் துவங்கிவிடும்; அதன் கம்பீரமான ஒலி கிராமம் முழுவதும் கேட்கும். கிராமத்தினர் இரவு உணவை முடித்துக் கொண்டு கதை கேட்கச் சென்றுவிடுவர். திருவிழா நெருங்க இருக்கும் நாட்களில் மதிய நேரத்திலும் மகாபாரதக் கதை நடைபெறும். இதை உறுமக் (மதியம்) கதை என்று கூறுவோம். இந்த மதியக் கதை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு சென்று விடுவோம். பாடத்தை விட பாரதம் அவ்வளவு இனிமையாக இருக்கும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் கீழவீதியை மையமாக கொண்டு இருக்கும். தெற்கு வீதியில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூன்று நாட்கள் "பக்த ருக்மாங்கதா' நாடகம் நடக்கும். மெலட்டூர், சாலியமங்கலம் பாகவதமேளா நாட்டிய பாணியில் நடந்த இந்த நாடகத்தைக் காண ஏராளமான கூட்டம் வரும்
·             75 ஆண்டுகள் தொடர்ந்து இந்த நாடகம் நடந்தது. ருக்மாங்கதனாக நடித்த கருப்பையா மூப்பனாரும் மோகினியாக நடித்த துரையப்ப மூப்பனாரும் மறைந்து போக இந்த நாடகமும் நின்று போனது'' என்று இன்றும் இங்குள்ள பெரியவர்கள் அன்றைய வசந்த காலத்தை அசை போடுகின்றனர்.
·             "மேல வீதியிலே ஐந்து நாட்களுக்கு ராம நாடகமும் லவாகுசா நாடகமும் நடந்து அமர்க்களப்படும். வடக்கு வீதியிலே சித்திரை மாதத்திலே சிறு தொண்டர் நாடகம், மூன்று நாட்களுக்கு நடக்கும். இதற்குப் போட்டியாக கீழ வீதியிலே அரிச்சந்திரா நாடகம் நடக்கும். எல்லாவற்றிலும் போட்டி இருக்குமே தவிர பொறாமை இருக்காது. ஒருவர் செய்ததைவிட மற்றொருவர் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவர்'' என்று முதியோர்கள் மூச்செறிகின்றனர்.
·             தீமிதியும், திருவிழாவுமாகத் திகழ்ந்த திரௌபதி அம்மன் ஆலயம், கிராமவாசிகளால் புதுப்பிக்கப்பட்டு நல்ல நிலைமையில் உள்ளது
எல்லை தொடக்கம்


·             கட்டுரைக்கு முன்னுரை போல, செய்திதாளுக்கு தலையங்கம் போல ஊரின் எல்லை தொடக்கம் ஒரு முக்கியமான ஒன்று.
·             பெரும்பாலும் ஒரு மாவட்டமோ, வட்டமோ அல்லது பேரூராட்சியோ

தொடங்கும் போதும் முடியும் போது எல்லை ஆரம்பம், எல்லை முடிவு, என்று ஒரு வர்ண பலகை நெடுஞ்சாலை துறையினரால் வைக்கப்படுவது வழக்கம் ஆனால் ஊராட்சிகள் பெரும்பாலும் ஒரு பெரிய வளைவு தன் சொந்த செலவில் வைப்பது வழக்கம்.
·             அது ஒரு தனி நபர் குறித்தோ, அல்லது அந்த ஊரில் உள்ள புகழ் பெற்ற ஆலயம் குறித்தோ வைப்பது வழக்கம்.
·             அப்படிதான் வீரமாங்குடி தொடக்க வளைவு சோமேஸ்வரப்புறத்தாரால் சீனிவாசன் வளைவு என்று 1980ல் கட்டப்பட்டுள்ளது.
·             இது தஞ்சையில் இருந்து திருவையாறு வழியாக வரும் வழியில் உள்ளது.

வரலாறு


ஓம் எனும் பிரணவ மந்திர கதை

 

  • திருக்கயிலை பிரானான  ஸ்ரீ பரமேஸ்வரன் ஒருசமயம் பிரணவ மந்திரத்தின் சூட்சமங்களை உலகறிய செய்ய வேண்டும் என தன் திருவுள்ளத்தில் நினைத்தான் .
  • எந்த பிரணவ மந்திரத்தின் சக்தியினால் அகிலமெல்லாம் அந்தரத்தில் தாழாமல் நிற்கின்றனவோ, அந்த மூல மந்திரத்தின் சக்தியையும், பெருமையையும் ஸ்ரீ முருகப்பெருமான் மூலம் தாம் கேட்டு இன்புற நினைத்தான்.
  • வேத சொருபீயான பரமேஸ்வரனுக்கு பிரணவ மந்திரத்தின் உட்பொருள் தெரியாதா? இருப்பினும் உலக நன்மை பொருட்டு ஒரு நாடகத்தை நடத்துவதற்கு திருவுள்ளம் கொண்டான்.
  • மயில்வாகனனும் தனது குழந்தையுமான ஸ்ரீ முருகப்பெருமானிடம் தெரிவிக்க, வள்ளி மணாளனும் சுவாமிமலையில் பிரணவமந்திரத்தின்  உட்பொருளை அம்மையப்பனுக்குக்  கூறுவதாக பதிலுரைத்தான்.
அதனை ஏற்று திருவுள்ளம் மகிழ்ந்த பெருமானும் திருக்கயிலையை விட்டு தென் திருக்கயிலாயம் என பூஜிக்கப்படும் திருவையாறு திருத்தலத்திற்குத் தன் தேவி பார்வதியுடன் எழுந்தருளினார்.

திருவையாறு

  •  பெருமானுடன் அம்பிகை ஸ்ரீ பார்வதியும், நந்தியும், கணபதியும், நவகிரகங்கள் தன் துணைவியாருடனும், இந்திராதி தேவர்களும் திருவையாற்றில் வந்திறங்கினர்.
  • தந்தையே ஆனாலும் சிவன் தனது மகனிடம் கற்க செல்கிறார் அல்லவா, எனவே சீடன் குருவிடம் செல்லும் போது. தன் குடும்பமேயானாலும்  விடுத்து தனியே குருகுலம் செல்வது என்பது நியதி. இது ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு நன்றாகவே தெரியும். எனவே அங்கிருந்து சுவாமிமலைக்கு எழுந்தருளிய எம்பெருமான் தான் மட்டும் சீடனாக ஸ்ரீ முருகப்பெருமானிடம் பிரணவத்தின் உட்பொருளை கேட்கவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு,தன்னுடன் வந்த அனைவரையும் 'கங்கையின் புனிதமாய காவிரி' எனப் போற்றப்படும் காவிரி நதியின் வடகரையின் ஓரமாகத் தன் தெய்வீக திருப்பாதம் பதித்து நடந்தான்.
திங்களூர்

  • எழுந்தருளும் வழியில் தன் சிரசிலிருந்த சந்திரனை ஓரிடத்தில் இருக்கச் செய்தார். சந்திரனுக்கு திங்கள் என்று பெயருண்டல்லவா, ஆதலால் சந்திரனை இறைவன் இறக்கிவிட்ட இடத்திற்கு திங்களூர் என்ற திருப்பெயர் ஏற்ப்பட்டது.
  • ஜனன கால ஜாதகத்தில் சந்திரனுக்கு தோஷமிருப்பின், அதற்க்கு மிக சிறந்த பரிகாரத்தளம் இந்த திங்களூர்.
வைரவன் கோயில்
  • சுவாமிமலை நோக்கி தன் திருவடிகள் நோக நடந்து சென்ற சிவபெருமான்,அடுத்ததாக ஓரிடத்தில் பைரவரை நிறுத்தினார், அதுவே பைரவ ஷேத்திரமாக மாறி இன்று வைரவன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
ஈச்சங்குடி
  • ஸ்ரீ முருகபெருமானிடம் சிஷ்யனாக மாறி பிரணவ மந்திர பொருளை கேட்கச்சென்ற இறைவன், தன் ஈஸ்வர அம்சத்தை ஓரிடத்தில் நிறுத்தினார். அந்த இடமே இன்று ஈச்சங்குடி என்று அழைக்கபடுகிறது.
சோமேஸ்வரபுரம்

  • அங்கிருந்து தன் பரிவாரங்களுடன் நடந்து சென்ற ஸ்ரீ சிவபெருமான் தன் சோமஸ்கந்தர்  அம்சத்தை நிறுத்தினார், இதனால் இத்தளம் சோமஸ்கந்தபுரம் என அழைக்கப்பட்டது பின் நாளடைவில் அதுவே சோமேஸ்வரபுரம் ஆனது.
வீரமாங்குடி
வஜ்ராகண்டேஸ்வர் ஆலயம்
தம்பதி சமேதர்களாக காட்சி தரும் நவகிரஹங்கள்
  • அதன் பின் தன்னுடன் தம்பதி சமேதர்களாக வந்த நவகிரஹங்களையும்,வீரர்களையும் ஒரு இடத்தில் நிறுத்தினார்.
  •  வீரர்களும் நவகிரஹங்களும் அமர்ந்த தளமாதலால் இதற்கு வீரமாங்குடி என்று பெயர் பெற்றது.
  • சுவாமிமலைக்கு சென்ற ஸ்ரீ சிவபெருமானின் பாதம் பட்ட இடத்தில் ஸ்ரீ வஜ்ராகண்டேஸ்வர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறான் ஸ்ரீ  சிவபெருமான்”
  • பரமனின் திருவுள்ளப்படி  நவகிரகங்கள் அனைவரும் தம்பதி சமேததர்களாக அருள்பாலித்து வருகின்றனர்.
துணைவியார்களுடன் ஸ்ரீ சுப்பிரமணியர்
    ஸ்ரீ மங்களாம்பிகை
  • தேவியின் திருநாமம் ஸ்ரீ மங்களாம்பிகை,பெருமானுக்கு இடபாகத்தில் ஆலயம் கொண்டு அருள்பாளிக்கின்றால்.
  • ஸ்ரீ மங்களாம்பிகை, கன்னிப் பெண்களுக்கு நல்ல வாழ்க்கையையும், திருமணமான பெண்களுக்கு சுமங்கலி பாக்கியத்தையும் தருபவளாக இருக்கிறாள். எனவே, இவளுக்கு “மங்களாம்பிகை” என்று பெயர் சூட்டியுள்ளனர். புதுமணத் தம்பதியர் தங்கள் வாழ்க்கை குறையின்றி இருக்க, இந்த அம்பிகைக்கு புடவை, மஞ்சள் கயிறு அணிவித்தும், மஞ்சள் கிழங்கு, மஞ்சள் பொடிகளை சன்னதியில் வைத்தும் வழிபடுகின்றனர். இதனால், அவர்களது வாழ்வு மங்களகரமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
வினாயகபெருமான்
     
  • சுற்றுபுறம் வினாயகபெருமான், துணைவியார்களுடன் ஸ்ரீசுப்பிரமணியனும், அழகாக ஸ்ரீ வரதராஜபெருமாளும் தனித்தனி ஆலயம் கொண்டு அருள்பாலிக்கின்றனர்.
  • காலமனைத்தையும் கடந்து தன் தெய்வீக சக்தி சிறிதும் குன்றாத கோபுரமாய் விளங்கும் இந்த கோவிலுக்கு இப்போது கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. 
தேவன்குடி
  • ஸ்ரீ சிவபெருமானின் பாதம் அடுத்து கடந்த இடம், இங்கு தேவர்களை நிறுத்தி, இருக்க செய்ததால், தேவர்கள் குடிகொண்ட இந்த தளம் தேவன்குடியானது.
மணலூர்
  • ஸ்ரீ சிவபெருமான், மாரியம்மனை இருக்க செய்த இடம் மணலூர் ஆனது.
இழுப்பைகோரை நந்தி மதகு
  • ஸ்ரீ சிவபெருமான், தன் வாகனமான நந்தியை இருக்க செய்த இடம் இழுப்பைகோரை  ஆனது.
கணபதி அக்ரஹாரம்

  • தன் முதல் மைந்தனும் ஆருமுகத்தனின் அண்ணனுமான கணபதியை இருக்கச்செய்தலால் கணபதி அக்ரஹாரம் ஆனது.
கவித்தளம்
  • வானர சேனைகளை இந்த தலத்தில் இருக்க செய்தார். வானர சேனைகளை கவி என்பர். கவி அமர்ந்த தளமாதலால் இது கவித்தளம் என்று அழைக்கபடுகிறது
உமையாள்புரம்
  • தன்னுடனான நாயகி பார்வதி தேவியான உமையாளை இருக்கைச் செய்த தளம் உமையாள்புரம் என்று அழைக்கபடுகிறது
 சுவாமிமலை

  • பின் தனியொரு சீடனாகவே தனயனிடம் உபதேசம் பெற சுவாமிமலைக்கு எழுந்தருளினான் எம்பெருமான்.
  • அப்பனுக்கு(சிவன்) பாடம் சொன்ன சுப்பையன் (முருகன் ) தளம் இந்த சுவாமிமலை.

  • அதாவது இந்த சுவாமிமலையில்தான் தந்தைக்கு உபதேசம் செய்தான் தமையனான முருகன்.  முருகனின் ஆறுபடை வீடுகளில் இந்த சுவாமிமலையும்ஒன்று.
  • குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பர். ஆனால் இந்த சுவாமிமலை செயற்கையாகவே அமைக்கப்பட்ட மலையாகும்.
திருவிளையாடல்
  • ஈசனே ஆனாலும் கூட ஒரு குருவிடம் உபதேசம் பெற எப்படி செல்ல வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே சிவபெருமான் நடத்திய இணையற்ற திருவிளையாடல் இது!
  • சுவாமிமலையில் சுவாமிநாதனாக எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான், தான் அறிந்ததைத் தந்தைக்குச் செய்த உபதேசம் மூலம் வெளிபடுத்திய இந்த புண்ணிய சரித்திரம் இன்று அனைவரும் அறிந்த ஒன்றாகிவிட்டதில்  வீரமாங்குடி குரூப் பெருமிதம் கொள்கிறது
என்னுரை
  • குமுதம் ஜோதிடத்தில் இடம்பெற்ற கட்டுரையோடு எனது சுயகருத்துகளையும் சேர்த்து இந்த கட்டுரை எழுதியுள்ளேன். கவித்தளமும் உமையாள்புறமும் அதில் இடம்பெறவில்லை ஒரு அனுமானத்தின் அடிப்படையில் சேர்த்துள்ளேன். இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால்  தெரிவிக்கவும். - மிறன்.ஜி

No comments:

Post a Comment